கடத்தல் வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் உத்தரவு
மதுரை: கடத்தல் வழக்கில் அரசு வக்கீலுக்கு தகவல் அளிக்காத கரூர் இன்ஸ்பெக்டரை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், தொண்டிப்பட்டி புதூரை சேர்ந்தவர் கந்தசாமி, துணி வியாபாரி. இவர் கரூரில் உள்ள ஆதிரை பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு துணிகளை விற்பனை செய்தார். இதற்காக அந்த நிறுவனம் கந்தசாமிக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டியிருந்தது.
இதை கேட்க சென்ற கந்தசாமியின் மகன் சங்கரை ஆதிரை பேப்ரிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், மற்றும் அங்கு வேலை செய்யும் சுரேஷ், குமார் ஆகியோர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
தனது மகனை கடத்தி வைத்துள்ளதாக ஆதிரை பேப்ரிக்ஸ் நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் மீது கரூர் காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் கந்தசாமி. இந்த மனு நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அரசு வக்கில், இந்த மனு கூறித்து கரூர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் அனுப்பினோம். அவர் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்க முன்வரவில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கரூர் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications