சிரஞ்சீவி எபெக்ட்: ஓட்டுகளை தக்க வைக்க சோனியா தீவிரம்

முதல் கட்டமாக சிரஞ்சீவி கட்சி தொடங்கிய அதே திருப்பதியில் பிரமாண்டமான மகளிர் கூட்டத்துக்கு காங்கிரஸ் அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது. இதில் சோனியா காந்தி பங்கேற்றுப் பேசுகிறார்.
சிரஞ்சீவியின் திருப்பதி கூட்டத்துக்கு சுமார் 10 லட்சம் குவிந்த நிலையில், இன்றைய தனது கட்சியின் கூட்டத்துக்கு அதே அளவில் கூட்டத்தைக் கூட்டிக் காட்ட முதல்வர் ராஜசேகர ரெட்டி முழு அளவில் களமிறங்கியுள்ளார்.
மாநில அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் சோனியாவுடன் முதல்வர் ராஜசேகர ரெட்டியும், அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 3 லட்சம் பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சியைச் சேர்ந்த மகளிரையும் லட்சக்கணக்கில் இங்கு அழைத்து வர ஆயிரக்கணக்கான பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு 25 பைசா வட்டி விகிதத்தில் 150 கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் சோனியா.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கடப்பா செல்கிறார். கடப்பாவில் ஐ.ஐ.டி., துவக்க விழாவுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்துகொண்டு பேசுகிறார்.
காங்கிரசில் ஆதிகேசவலு நாயுடு?:
இந் நிலையில் சோனியாவை, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவரான ஆதிகேசவலு நாயுடு நேற்று முன்தினம் டில்லியில் சந்தித்துப் பேசினார். திருப்பதி பிரசாதத்தை சோனியாவிடம் அவர் வழங்கினார்.
சோனியாவின் அரசியல் விவகார செயலர் அகமது படேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களைச் சந்தித்த ஆதிகேசவலு நாயுடு, இன்று திருப்பதி வரும் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர் தேவஸ்தான போர்ட் பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications