கூட்டணிக்கு அலைகின்றனர்: விஜயகாந்த்
மதுரை: தங்களது கட்சி, ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணிக்கு அலைகின்றனர். ஆனால், வரும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மதுரை திருநகரில் அக்கட்சியின் நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து விஜயகாந்த் பேசியதாவது:
ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் குழம்பு வைக்க 50 ரூபாய் செலவாகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை இல்லை. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள எனது திருமண மண்டபத்தை இடித்தனர். என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துகின்றனர்.
திமுக, அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தினால் அள்ளிக் குவிக்கலாம்.
இலவச டிவி கொடுக்கின்றனர், கேபிள் இணைப்பு கொடுப்பார்களா? மக்களுக்கான நல்ல திட்டங்களை, திமுகவும், அதிமுகவும் செயல்படுத்தி இருந்தால், நான் கட்சி ஆரம்பித்து இருக்க மாட்டேன்.
தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா, கர்நாடகாவிற்கு நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொடுக்கின்றனர்.
அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெருகிவிட்டது.
எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். அதை நம்ப வேண்டாம். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணிக்கு அலைகின்றனர்.
திமுக, அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள், எங்களுக்கு ஒருமுறை ஓட்டளித்து வாய்ப்பு கொடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications