500 கி.மீ. ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி வாலிபர் சாதனை
சென்னை: சிவகங்கையில் இருந்து சென்னை வரை 500 கிலோ மீட்டர் தூரம் ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார் உடல் ஊனமுற்ற வாலிபர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் வி.மணிகண்டன் (25). இவர் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் விளையாடியபோது கீழே விழுந்தார். இடது கால் முட்டியில் படுகாயம் ஏற்பட்டதால் தொடைக்கு கீழே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கால் போனாலும் மணிகண்டனின் நம்பிக்கை போகவில்லை. சாதனை ஒன்றை படைக்காமல் ஓய்வதில்லை என்று உறுதியோடு, சிவகங்கையில் இருந்து சென்னை கோட்டை வரை 500 கிலோ மீட்டர் தூரம் ஒற்றைக்காலில் இரண்டு சக்கர சைக்கிள் ஓட்டி வந்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி சிவகங்கை அரண்மனை கோட்டை முன்பு மணிகண்டனின் சாதனை முயற்சியை மாவட்ட எஸ்பி கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நண்பர்கள் துணையுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் மணிகண்டன் சென்னை வந்து சேர்ந்தார். கோட்டையில் சாதனையை முடித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற திட்டமிருப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications