மன்மோகனின் சீரிய தலைமை - சோனியா பாராட்டு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சீரிய தலைமையாலும், அவரது தளராத முயற்சியாலும்தான் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறும் கட்டத்தை எட்டியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டியுள்ளார்.
6 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை சந்திப்பது குறித்தும், அணு சக்தி ஒப்பந்தம் குறித்து உருவாகியுள்ள புதிய சூழ்நிலை குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.
தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய உத்திகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.
சோனியா காந்தி தலைமையில் கூடிய இக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், கட்சியின் செயலாளர்கள், அழைப்பாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இந்திய அணு சக்தி ஒப்பந்தம் இந்த அளவுக்கு வந்ததற்கு முக்கிய காரணமே பிரதமரின் சீரிய தலைமையும், அவரது இடைவிடாத முயற்சிகளும்தான். இந்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவற்றில் நமக்கு வெற்றி கிடைத்ததற்கு பிரதமரின் தலைமையும், முயற்சிகளுமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தில் அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும், தீவிரமும்தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த ஒப்பந்தம் நாட்டு நலன் மற்றும் மக்கள் நலனுக்கு மிகவும் முக்கியமானது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டின் எரி சக்தி தேவை பெருமளவில் பூர்த்தியாகும். பொருளாதார, தொழில்நுட்ப, அரசியல் கோணங்களில் நாட்டுக்கு புதிய பரிமாணம் ஏற்படும்.
வளர்ச்சி மற்றும் ஆய்வில் நாடு புதிய பொலிவையும், மேம்பாட்டையும் அடையும்.
அரசியல் ரீதியிலும் இந்தியாவின் நிலை மேலும் சிறப்படையும். அணு சக்தி துறையில் இந்தியா சிறப்பான அங்கீகாரத்ைத தற்போது பெற்றுள்ளது.
தகுதியிருந்தால்தான் சீட்:
தேர்தலில் கோட்டா அடிப்பையில் சீட் கிடைக்கும் என்று யாராவது நினைத்தால் அதை காங்கிரஸார் மாற்றிக் கொள்ள வேண்டும். தகுதியின் அடிப்படையில்தான் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் சீட் தரப்படும்.
கோட்டா முறையை இனியும் நாம் தொடர முடியாது. முழுக்க முழுக்க திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில்தான் இனி வேட்பாளர் தேர்வு இருக்கும். பழையை முறைக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
அந்தோணி கமிட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்த நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications