மின்வெட்டுக்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்: ஆற்காடு வீராசாமி

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மின்சார பிரச்சனையைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாததால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் நானும், முதல்வரும் இந்த பிரச்சனைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் 30 சதவிகிதம் அளவுக்கு மின்வெட்டு இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, முதல்வர்களோ பதவி விலகவில்லை.
அப்போது அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் இப்போது எங்களை ராஜினாமா செய்யுமாறு கேட்பதில் நியாயம் இருக்கலாம்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ராஜினாமா தீர்வாகி விட முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனையில் 2 மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அன்புமணியை ராமதாஸ் ராஜினாமா செய்ய சொன்னாரா? இதேபோல ஜிப்மர் மருத்துவமனை பிரச்சனை தொடர்பாகவும் 3 மாதம் போராட்டம் நடந்தது. அப்போதெல்லாம் நாங்கள் அன்புமணியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை.
பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மின்வெட்டு உள்ளது. ஆனால் அவர்களை எல்லாம் ஏன் இல.கணேசன் ராஜினாமா செய்ய சொல்லவில்லை, எங்களை மட்டும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
தொழிலதிபர்களுடன் ஆலோசனை கூட்டம்:
தலைமை செயலகத்தில் இன்று தொழிலதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக சீராக மின்சாரம் இருப்பதாகவும், இந்தநிலை நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொழிலதிபர்கள் 3000 மெகாவாட் அளவிற்கு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இதற்கு தேவையான எரிபொருளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதுபற்றி மீண்டும் திங்கட்கிழமை அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவர்கள் எவ்வளவு அளவிற்கு மானியம் கேட்கிறார்கள், அதற்கு அரசால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications