காஸ் இணைப்பு பெற இனி ரேஷன் கார்டு அவசியமில்லை
சென்னை: தமிழகத்தில் காஸ் இணைப்பு பெறுவதற்கு இனிமேல் கட்டாயம் ரேஷன் கார்டு காட்டத் தேவையில்லை. மாறாக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டினால் புதிய இணைப்பு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது புதிய காஸ் இணைப்பு பெற விண்ணப்பிப்போர், கண்டிப்பாக ரேஷன் கார்டு காட்ட வேண்டும் என விதிமுறை உள்ளது. அப்படி கார்டு இல்லாதவர்கள், கார்டுக்கு விண்ணப்பித்த ரசீதை காட்ட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இது.
இந்த விதிமுறையால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். புதிய காஸ் இணைப்பு பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், காஸ் ஏஜென்சிகள் இந்த விதிமுறையை மிகவும் கடுமையாக கடைப்பிடிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த விதிமுறையை தமிழக அரசு தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது எரிவாயு இணைப்புப் பெறுவதற்கான எண்ணை நிறுவனங்கள், எரிவாயு ஏஜென்சிகள், ஆதார ஆவணமாக குடும்ப அட்டையை வலியுறுத்துகிறது.
இதை தீர ஆராய்ந்த அரசு பொது மக்கள் எரிவாயு இணைப்புகளைப் பெறுவதற்கு குடும்ப அட்டை தேவை என்றநிபந்தனையை அரசு தளர்த்தியுள்ளது.
மேலும் குடும்ப அட்டையின்றி தேசிய எண்ணை நிறுவனங்களால் ஏற்கப்படும் வேறு ஏதேனும் தகுந்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில், எரிவாயு இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளளாம் என்றும் எரிவாயு இணைப்பு வழங்க குடும்ப அட்டையை இனி வலியுறுத்தக் கூடாது என்றும் அரசு ஆணையிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி இனிமேல் ரேஷன் கார்டு இல்லாதவர்கள், அதற்குப் பதில் பான் கார்டு, அடையாள அட்டை, எல்.ஐ.சி. பாலிசி, மின்சார பில், டெலிபோன் பில், வீட்டுப் பத்திரம், வாக்காளர் அடையாள அட்டை, வாடகை ரசீது, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டு முகவரிக்கான ஆவணமாக காட்டலாம்.
இந்த உத்தரவு குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் ரேஷன் கார்டு கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications