இலங்கைக்கு தப்ப முயன்ற 7 அகதிகள் கடலில் மூழ்கி பலி
ராமேஸ்வரம்: மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்றபோது, படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 அகதிகளை கடற்படை பத்திரமாக மீட்டது.
இலங்கையில் கடுமையான போர் நடந்து வருவதால் அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில அகதிகள் போலீஸாருக்கு தெரியாமல் கள்ளத்தோணி மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்கின்றனர். கடற்படையினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை, பழனி, திருவண்ணாமலை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பெண்கள் உள்பட 13 அகதிகள் இலங்கைக்கு தப்பிச் செல்ல மண்டபம் வந்தனர். கள்ளத்தோனி மூலம் இலங்கைக்கு செல்வதற்காக ஏஜெண்ட் ஒருவரிடம் தலா ரூ.6,000 கொடுத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி இரவு 9 மணியளவில் நாட்டுபடகு மூலம் இலங்கைக்கு புறப்பட்டனர். பௌர்ணமி என்பதால் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளித்து வருகிறது. படகோட்டியும் குடிபோதையில் இருந்துள்ளார்.
இருட்டில் கடலலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திசைமாறி படகு சென்றது. நேற்று முன்தினம் தனுஷ்கோடி 3 மற்றும் 4வது தீடைக்கு இடையி்ல் நடுக்கடலி்ல் படகு சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அலைகளால் பயங்கரமாக தாக்கப்பட்டு படகு கவிழ்ந்தது. இதில் 13 பேரும் நீரில் மூழ்கினர். உயிர் தப்புவதற்காக 3ம் தீடை நோக்கி நீந்தினர்
ஆனால் பெண்களால் கடல் அலைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதில் பூமணி (68) , ரெஜினால்டு என்பவரது மனைவி சகாயமேரி (27), நித்யா (25), கோபிகா (7) மற்றும் ஒரு ஆண்குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியானார்கள்.
இதயராணி (42), செல்வநாதன் (25), ரெஜினால்டு , ரவி, சுமன் மற்றும் படகோட்டி ஆகியோர் உள்பட 7 பேர் நீந்தி 3ம் தீடையில் கரையேறினர். நாள் முழுவதும் பசி, தாகத்தால் தவித்தனர். பின்னர், படகு கொண்டு வருவதாக கூறி படகோட்டி நீந்தி சென்றார். போலீஸாருக்கு பயந்து ரவி, சுமன் மற்றுமொருவர் கடலில் குதித்த நீந்தி அரிச்சல்முனைக்கு தப்பித்தனர்.
3ம் தீடையில் 3 பேர் தவித்துக் கொண்டிருப்பதாக கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தவித்துக் கொண்டிருந்து ரெஜினால்டு, இதயராணி, செல்வநாதன் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.