உள்நாட்டு பாதுகாப்பு: ஆளுநர்களுடன் நாளை ஜனாதிபதி ஆலோசனை
டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை 2 நாள் மாநாடு தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதற்குத் தலைமை தாங்குகிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் 42வது மாநாடு இது. குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் பிரதீபா பாட்டீல் தலைமை தாங்கும் முதல் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில்28 மாநில ஆளுநர்கள், 3 துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவு, மனித வள மேம்பாடு, விவசாயம் மற்றும் நுகர்வோர் நலம், உணவு, பாதுகாப்பு, உள்துறை, நிதி, பழங்குடியினர் நலம், ஊரக வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள், மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
தீவிரவாத செயல்கள் அதிகரித்து வரும் பின்னணியில் உள்நாட்டு பாதுகாப்பு சூழல் குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும், சர்வதேச பிரச்சினைகள், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.