தனி தெலுங்கானா: விஜயசாந்தியுடன் டிஆர்எஸ் கூட்டணி
ஹைதராபாத்: சிரஞ்சீவி அலையை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் ஆழ்ந்துள்ள நிலையில், தெலுங்கானா பகுதியில் வாக்குகளை தக்க வைக்க விஜயசாந்தியுடன் இணைந்து செயல்பட தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, விஜயசாந்தி, பாஜக என இருந்து வந்த ஆந்திர அரசியல் சூழல் தற்போது சிரஞ்சீவியின் வருகையால் கலகலத்துப் போயுள்ளது.
சிரஞ்சீவியை சமாளிக்கும் வழிகள் குறித்து காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவை தீவிரமாக சிந்தித்து வருகின்றன. இந்த நிலையில், தெலுங்கானா பகுதியில் தங்களது நிலையை ஸ்திரமாக்கும் முயற்சியில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி இறங்கியுள்ளது. அதன் முக்கிய முயற்சியாக விஜயசாந்தியுடன் இணைந்து செயல்பட அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயசாந்தியை, சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது தெலுங்கானா தனி மாநிலம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து அவர் விஜயசாந்தியுடன் ஆலோசித்தார்.
விஜயசாந்தி தெலுங்கானாவைக் குறி வைத்து தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை அவர் ஒரு அரசியல் சக்தியாக உருப் பெறவில்லை. அதேபோலஆரம்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சந்திரசேகர ராவின் செல்வாக்கு இப்போது பெருமளவில் மங்கி விட்டது.
இந்த நிலையில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது தெலுங்கானா பகுதி அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
தனது யோசனைக்கு விஜயசாந்தி ஆதரவுதெரிவித்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்து அவர் அறிக்ைக வெளியிடுவார் எனவும் ராவ் தெரிவித்தார்.