குழந்தைகள் பராமரிப்பு: 3 ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் விடுப்பு!
டெல்லி: அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர குழந்தைகள் 18 வயதாகும் வரை, 3 ஆண்டுகள் வரை குழந்தைப் பராமரிப்புக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பிரசவகால விடுப்பாக (ஒரு குழந்தைக்கு) தற்போது 135 நாட்கள் உள்ளது. இதை 180 நாட்களாக அதிகரித்துள்ளது அரசு. அதன்படி இரு குழந்தைகளுக்கு ஒரு ஆண்டு வரை விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்.
அத்தோடு, குழந்தைகள் பராமரிப்பு விடுமுறை என்ற புதிய விடுப்பையும் அரசு அறிவித்துள்ளது. அதாவது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 ஆண்டு வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பினை இனி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இரு குழந்தைகளும் 18 வயது அடையும் வரை, எந்தக் கட்டத்திலும் இந்த விடுமுறையை பெண் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதாக இருந்தால் ஒட்டுமொத்தமாக இந்த 2 ஆண்டு விடுப்பை எடுத்துக் கொள்ளவும் முடியும். இத்தோடு 6 மாத கால பேறு கால விடுப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த ஒப்புதலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு, தேர்வு உள்பட குழந்தைகள் தொடர்பான எந்த காரணத்துக்காகவும் இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண் ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது மகனுக்காக நேரம் செலவிட முடியும். அவனது 18 வயது வரை அவனுக்குத் தேவைப்படும்போது இந்த விடுப்பை எடுத்துக் கொள்வேன் என்றார் மகிழ்ச்சியுடன்.
அரசின் இந்த அறிவிப்பை ஆண்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். குழந்தையை தன்னால் பராமரிக்க முடியவில்லை என்றாலும் மனைவிக்கு கிடைக்கும் இந்த விடுப்பு, குழந்தை வளர்ப்புக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர்.