தூத்துக்குடியில் ஐசிஐசிஐ வங்கி திவால் என வதந்தி-மக்கள் பீதி
அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸ் திவால் ஆகி விட்டது. இதையடுத்து இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகிவுள்ளது.
இந்தியாவின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் இங்கிலாந்து பிரிவிலும் லேமேனின் முதலீடு உள்ளது.
இந் நிலையில் ஐசிஐசிஐ திவால் ஆகி விட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வதந்தி பரவியது.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால் ஐசிஐசிஐ வங்கியும் திவால் ஆகி விட்டதாக இன்று காலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டனம் ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது.
இதையடுத்து இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிளைகளில் குவிந்தனர். ஏடிஎம் மையங்களிலும் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கிய பின்னரே பாதி மனதுடன் வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.
சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகளை ஏற்க மறுப்பு:
இந்த நிலையில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை ஏற்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இதனால் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.