பரோல்-வெளியே வந்து உள்ளே போன காடுவெட்டி குரு
விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சிறையில் உள்ள காடுவெட்டி குரு பரோலில் நேற்று விழுப்புரம் வந்தார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் காடுவெட்டி குரு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பரோலுக்கு விண்ணிப்பித்தார். அனுமதி கிடைத்ததை அடுத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் கொண்டு வரப்பட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிககள், குருவின் வருகைக்காக காத்திருந்தனர். அவர் வந்த பிறகு நிகழ்ச்சிகள் தொடங்கின.
நான்கு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு மட்டுமே குருவை போலீஸார் அனுமதித்தனர். நிகழச்சி முடிந்ததும் அவர் மீண்டும் திருச்சி கொண்டு செல்லப்பட்டார்.