உலக நிதி நிலை-அமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு

லேமென் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலக பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் திவாலாகலாம் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்திய வங்கிகளுக்கு அப்படி ஒரு ஆபத்து இல்லை. எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் அவை ஸ்திரமாக உள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் பங்குச் சந்தையில் கடந்த ஓரிரு நாட்களாக நிலவி வந்த சரிவு தற்போது சரியாகத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். உலகப் பொருளாதார நிலை, இந்தியப் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது உலகப் பொருளாதார நிலையால், இந்திய பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்படாது என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், உலக பொருளாதார நிலையை கூர்ந்து கவனித்து வர வேண்டும் எனவும் கேபினட் அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பொருளாதார நெருக்கடி குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் விரிவாக விளக்கினார். அப்போது, அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்று தெளிவுபடுத்தினார் என்றார் பிரசாத் சிங்.












Click it and Unblock the Notifications