அதிமுக புறக்கணிக்கிறது-எஸ்.வி.சேகர் பகிரங்க புகார்

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர் எஸ்.வி.சேகர். பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சொல்லித்தான் அதிமுகவில் இணைந்ததாக சமீபத்தில் சேகரே தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் மேலிடத்துடன் நெருக்கமாக இருந்து வந்த சேகர், மைலாப்பூர் தொகுதியில் நெப்போலியனை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.
இந் நிலையில் சமீபகாலமாக அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒத்துப் போகவில்லை. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ஜெயலலிதா, எஸ்.வி.சேகர் மீது கோபம் கொண்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு எஸ்.வி.சேகர் அழைக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த சேகர், சட்டசபைக்கு விரைந்தார். இதனால் அவர் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவியது. அதிமுகவினர் விரைந்து வந்து சேகரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்றனர். ஆனால் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார் சேகர்.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த எஸ்.வி.சேகர் இல்லத் திருமண விழாவுக்கு முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். அவருக்கு அருகில் புன்னகைத்தபடி எஸ்.வி.சேகர் நின்றிருந்தது போன்ற போட்டோ வெளியாகி ஜெயலலிதாவை கொதிப்படைய வைத்தது. சேகர் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் ஜெயலலிதா எந்த நடவடிக்கையையும் எடுக்காமல்இருந்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை அருகே வானகரத்தில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு எஸ்.வி.சேகர் அழைக்கப்படவில்லை. வழக்கம் போல அவரை புறக்கணித்து விட்டனர்.
இந் நிலையில், கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சேகர். அப்போது அதிமுக தன்னைப் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார் சேகர்.
அவர் கூறுகையில், என்னை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இது எனக்கு வருத்தம் அளித்துள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் எதுவும் நடக்க முடியாது.
என்னை அதிமுகவை விட்டு நீக்குவார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அப்படியே நீக்கப்பட்டாலும் கூட அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் சேகர்.
அவர் விரைவில் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications