அரிசி கடத்தல்.. அமைச்சர் பேச்சு: ஜெ. விளாசல்
சென்னை: அரிசிக் கடத்தலையும் மனதில் வைத்துத்தான் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை திமுக அரசு தீட்டியுள்ளது என்று பேசியுள்ள அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலியில் நடந்த ஓர் அரசு விழாவில், அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், அரிசி கடத்தலுக்கும் சேர்த்து கணக்கு பார்த்து தான் இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறோம். கடத்தல் தவிர்க்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் திமுகவினரால் அரிசிக் கடத்தல் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அரிசிக் கடத்தலை ஆதரித்து பேசிய அமைச்சரின் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா?
மணல், சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களை கடத்தியது போதாது என்று தற்போது மளிகைப் பொருட்களையும் திமுகவினர் கடத்துவதற்கு கருணாநிதி வழி செய்து கொடுத்திருக்கிறார். இது ஓர் ஏமாற்று திட்டம். மக்கள் இந்த கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை.
கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பொருளாதார நெருக்கடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்களாலேயே மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications