கிருஸ்துவர்கள் மீது தாக்குதல்-கர்நாடக பஜ்ரங் தள் தலைவர் கைது

கர்நாடகத்தி்ல் கடந்த சில வாரங்களாக சர்ச்சுகள் மீதும், கிருஸ்துவர்கள் மீதும் பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலக்கு பஜ்ரங் தள் முழுப் பொறுப்பேற்றபோதும் அதன மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இதையடுத்து மத்திய அரசு அரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் கர்நாடகத்துக்கு இரு முறை எச்சரிக்கை விடுத்தது. கிருஸ்துவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அடுத்தபடியாக 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை (மாநில அரசைக் கலைப்பது) எடு்க்கப்படலாம் என்ற நிலையில், நேற்றிரவு மகேந்திர குமாரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த மறுத்து வந்த முதல்வர் எதியூரப்பா, திடீரென 'யு டர்ன்' அடித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பஜ்ரங் தள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏதும் பேசாமல், மதமாற்றத்தில் கிருஸ்துவ அமைப்புகள் ஈடுபட்டு வருவதால் தான் இந்தத் தாக்குதல்கள் நடப்பதாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் எதியூரப்பாவும் உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசின் கடும் எச்சரிக்கையால் மகேந்திர குமாரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியில் மற்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை பஜ்ரங் தள் அமைப்புக்கு முதல்வர் தரவில்லை என்றும், இதனால் தான் இந்தத் தாக்குதல்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு தனது அதிருப்தியை இந்த வழியில் காட்டியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications