மொபைல்- நெட்வொர்க் மாறினாலும் அதே நம்பர்!
டெல்லி: ஒரு நிறுவனத்தி்ன் மொபைல் போன் சர்வீஸிலிருந்து வேறு நிறுவன சேவைக்கு மாறினாலும், வாடிக்கையாளர் பழைய மொபைல் எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலான திட்டம் (Mobile Number Portability) அடுத்த ஆண்டு இந்தியாவில் அமலாக்கப்படவுள்ளது.
உதாரணத்துக்கு ஏர்டெல்லிலிருந்து நீங்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறினாலும் உங்கள் பழைய ஏர்டெல் எண்ணையே தொடர்ந்து உபயோகிக்க முடியும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த சேவையை அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்புத் துறை உத்தேசித்துள்ளது. இத்தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெஹூரா தெரிவித்தார்.
2015ல் 100 கோடி உபயோகிப்பாளர்கள்!:
இந் நிலையில் வரும் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 100 கோடியைத் தொட்டுவிடும் என இந்திய மொபைல் போன் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் இயக்குநர் டி.வி. ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மொபைல் போன் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2012ல் 75 கோடி மக்கள் மொபைல் போன்களை உபயோகிப்பார்கள் என நம்புகிறோம். இந்த நிலை மேலும் அதிகரித்து 2015லேயே 100 கோடி இலக்கைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 30 கோடி.
இனி உலகத் தரத்துக்கு ஏற்பட மொபைல் போன் வசதியை இந்தியாவில் செய்து தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications