'விஜயன்': பானுவுக்கு உண்மை கண்டறியும் சோதனை?

எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக முதலில் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் துப்பு துலங்கியது.
குடும்பச் சண்டை காரணமாக கருணா என்கிற கருணாகரன் என்கிற காவலர் மூலம் கூலிப் படையினரை ஏவி, விஜயனின் மனைவி சுதாவின் தங்கையான பானுதான் இந்தக் கொலையை செய்தார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பானு, கருணா உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பானுவையும், கருணாவையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையின்போது பானு, போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் கோர்ட் அனுமதியைப் பெற்று பானுமதியிடம் பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications