தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி-விஜயகாந்த் திட்டம்

இந் நிலையில் தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்காலத்தில் பேசத் தயாராக இருப்பதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட இடதுசாரிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே ஆர்வம் காட்டின. ஆனால், அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படலாம் எனத் தெரிவதால், விஜய்காந்துடன் கைகோர்க்க அக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந் நிலையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டில் நேற்றிரவு அவரை மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்தித்தனர்.
அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் விஜய்காந்துடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக்குப் பின் வரதராஜன் கூறுகையில்,
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொள்ளாத கட்சிகளுடன்தான் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் முடிவு செய்து உள்ளன.
இந் நிலையி்ல் எங்களது கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவுப்படியே விஜய்காந்தை சந்தித்தோம். தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து அறியவும் அவரை சந்தித்தோம்.
நான் எந்த கட்சியுடனும் தேர்தல் உறவு வைத்துக் கொள்ளவில்லை. தனித்தே நிற்கிறேன். எதிர் காலத்தில் உங்கள் கட்சிகளுடன் கலந்து பேசலாம் என விஜய்காந்த் தெரிவித்துள்ளார் என்றார் வரதராஜன்.
தேசிய அளவில் கூட்டணி-தமிழகத்தில் தனி!
இந் நிலையில் வரதராஜனுடனான சந்திப்பு குறித்து விஜயகாந்த் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் வரதராஜன் என்னை வந்து சந்தித்துப் பேசினார். அவர் பெரியவர், அரசியலில் நான் மதிக்கக் கூடிய தலைவர்களில் அவர் ஒருவர்.
கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசினார். எங்களது நிலை குறித்து அவரிடம் தெரிவித்தேன். தமிழத்தைப் பொறுத்தவரை நாங்கள் தனியாகத்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய அளவில் மக்கள் விரும்பும் கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. எனவே எதிர்காலத்தில் கூட்டணி குறித்து பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று அவரிடம் தெரிவித்தேன்.
கட்சியின் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்து பேசி இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் பேச்சின் மூலம் தமிழகத்தில் தனித்தும், தேசிய அளவில் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications