அரிசி-திரித்துக் கூறும் ஜெ: அமைச்சர் தாக்கு
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் தவறானது, எனது பேச்சை ஜெயலலிதா திரித்துக் கூறியுள்ளார் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் கூறியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையி்ல்,
திருநெல்வேலியில் நடந்த ஓர் அரசு விழாவில், அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், அரிசி கடத்தலுக்கும் சேர்த்து கணக்கு பார்த்து தான் இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறோம். கடத்தல் தவிர்க்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இதை மறுத்து இன்று மைதீன் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 16ம் தேதி நெல்லையில் நடந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் விழாவில் நான் பேசியது பற்றிய செய்தி 17ம் தேதி நெல்லையில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சிகளிலும் வெளிவந்துள்ளது.
ஆனால் 3 நாட்கள் கழித்து 18ம் தேதி என்னுடைய பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு.
உலகத்திலேயே ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது தமிழகத்தில் அமைந்துள்ள கருணாநிதி அரசுதான். நல்ல பல இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதை அரசியலில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா குறை கூறிக்கொண்டு தினம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.
எந்த சராசரி மனிதரும் இந்த அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பார்களே தவிர, கடத்தலை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
எனவே நான் பேசிய கருத்து ஜெயலலிதாவால் திரித்துக் கூறப்பட்டுள்ளது. திசை திருப்பும் நோக்கத்தில் என்மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்ற ஒன்று.
தமிழகத்தில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி வழங்குவதை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications