அரிசி கடத்தலை அரசு அனுமதிக்காது: ஜெ. புகாருக்கு அமைச்சர் மறுப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, அரிசி கடத்தலை ஒரு போதும் அனுமதிக்காது. யாராயிருந்தாலும் தண்டித்தே தீரும். திசை திருப்பும் நோக்கத்தில் என் மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் இளைஞர் நலத்துறை அமைச்சர் மைதீன் கான்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 16ம் தேதி நெல்லையில் நடந்த ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை வழங்கும் விழாவில் நான் பேசியது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
உலகத்திலேயே ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவது கருணாநிதி அரசுதான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர இலவச டிவி, காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு, பள்ளிகளில் வாரத்துக்கு 3 முட்டைகள் போன்ற நல்ல பல இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதை அரசியலில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா, அரசை குறை கூறி கொண்டு தினம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.
இந்த அரசு செயல்படுத்திக் கொண்டு இருக்கும் பல நல்ல திட்டங்களை குறிப்பாக ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவதை எந்த சராசரி மனிதரும் ஆதரிப்பார்களே தவிர, கடத்தலை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
நான் பேசியதன் கருத்து ஜெயலலிதாவால் திரித்துக் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியில் தலைமையில் உள்ள இந்த அரசு கடத்தலை ஒருபோதும் அனுமதிக்காது. யாராயிருந்தாலும் தண்டித்தே தீரும். திசை திருப்பும் நோக்கத்தில் என் மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்ற ஒன்று.
ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications