உளவுப் பிரிவுகள்-சிவராஜ் பாட்டீல் கோரிக்கை
டெல்லி: மாநில புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
தீவிரவாதத்தை ஒடுக்குவது, புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க சில மாநில டிஜிபிக்களின் கூட்டத்தை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா மாநில டிஜிபிக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கினர். தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும், சதித்திட்டங்களை கண்டறிந்து முன்கூட்டியே முறியடிக்கவும் மாநிலங்களில் உள்ள புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்புகள் நவீன முறைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
மாநில புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை டிஜிபிக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பிரிவு போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்ய வேண்டும். சில மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. இது கவலை அளிக்கிறது. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. அங்கு சட்டம் மீறப்பட்டுள்ளது என்றார்.