சுரேஷ்ராஜன் வழக்கு: வாக்குமூலம் அளிக்க சப் கலெக்டருக்கு உத்தரவு
மதுரை: அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான வழக்கில், சப்-கலெக்டர் ஜனார்த்தனன், நாகர்கோவில் டிஎஸ்பி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அரசு கலர் டிவி வழங்கும் விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்-கலெக்டர் ஜனார்த்தன் புகார் செய்தார்.
இந்நிலையில், சப்-கலெக்டர் ஜனார்த்தனன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ம் தேதி அன்று அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், விதிக்கு புறம்பாக சிலரது பெயரை சேர்க்க கூறினார். அதற்கு நான் மறுத்து விட்டேன். இதனால் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் என்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டினர்.
இதுகுறித்து அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அதன் பேரில் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது போலீசார் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந்த நிலையில், அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான புகாரில் எந்த வித முகாந்திரமும் இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்காது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சப்-கலெக்டர் ஜனார்த்தனன் வரும் 29ம் தேதி நாகர்கோவில் டிஎஸ்பி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications