தை.1 புத்தாண்டு அரசு அறிவிப்பு செல்லும்-உயர் நீதிமன்றம்
மதுரை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 தமிழ் ஆண்டுகளையும் தமிழ்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் தமிழ்நாடு முருக பக்தர் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதி அன்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதி கோரி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு செய்தேன். இந்த மனுவை நிராகரித்து, கோவில் வாசலில் தமிழ்ப் புத்தாண்டு என்று போர்டு வைக்க இணை ஆணையர் அனுமதி மறுத்துவிட்டார்.
தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துள்ளது என்று கூறுகிறார். இது எங்கள் அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும். சித்திரை முதல் தேதியை காலம் காலமாக இந்துக்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். எனவே இணை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தீர்ப்பு கூறியதாவது:
தமிழ்ப் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது என்பதை பக்தர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சட்டமன்றம் அல்ல என்று மனுதாரர் கூறியுள்ளார். சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் சமர்பிக்கவில்லை. மதத்தையும் மொழியையும் மனுதாரர் கலக்கிறார்.
புத்தாண்டை எல்லா தரப்பினரும் கொண்டாடுகின்றனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என அனைத்து மதத்தினரும் அன்றைய தினம் அவரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர்.
நாட்டில் பல்வேறு காலண்டர்கள் பின்பற்றப்படுகின்றன. இதில் பல பிரச்சனைகள் உள்ளன. தமிழில் உள்ள 60 ஆண்டுகளும் சமஸ்கிருத்தில் உள்ளது. இதை முதலில் தமிழ்படுத்த வேண்டும். வல்லுநர் குழு அமைத்து அரசு ஆலோசனை கேட்கலாம்.
தமிழ் காலண்டரில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசுக்கு காலண்டரில் மாற்றம் கொண்டு வர முழு உரிமை உள்ளது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சித்திரை முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுவது குறித்து பேசுவது மதச்சாயம் பூசுவதாகும் என்று கூறினார்.