எதியூரப்பாவை எகிறிய பிஷப்-இ.முன்னணி கண்டனம்
சென்னை: தேவாலயங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்போவதாக அறிவித்த அரசு, கோவில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக முதல்வர் எதியூரப்பா, கர்நாடகா-பெங்களூர் ஆர்ச் பிஷப்பை அவரது வீட்டில் சென்று சந்தித்திருக்கிறார். ஆனால், ஆர்ச் பிஷப், எதியூரப்பாவை வரவேற்காமல் தன்னுடைய வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து நாங்கள் புண்படுத்தப்பட்டதாக ஆவேசமாகத பேட்டியளித்திருக்கிறார்.
இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. முதல்வர் எதியூரப்பா ஆர்ச் பிஷப் வீட்டிற்கு போயிருக்க கூடாது. நமது நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு நல்ல முன் உதாரணத்தை கர்நாடக முதல்வர் செய்யப் போய் அவமதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஏராளமானவர்கள் வருந்தியுள்ளார்கள்.
பாஜக ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவ கெளடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண்டாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலையச் செய்ய தேவாலயங்களை தாக்கியிருக்கக்கூடும்.
தேவாலய தாக்குதல் சம்பவங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும் அரசு, ஒரிஸ்ஸாவில் லட்சுமணானந்தா கொலை சம்பவத்தின்போதும், இந்துக்கள் பாதிக்கப்பட்டபோதும் குழுவை அனுப்பாதது ஏன்?
தேவாலயங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்போவதாக அறிவித்த அரசு, கோவில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.
மோசடி மதமாற்றமும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி நடத்தப்படும் பிரசாரங்களும்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது உலகறிந்த உண்மை.
இதை ஆர்ச் பிஷப் நிறுத்தினால் அமைதி திரும்பும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்து மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்றும், கலவரங்களில் குளிர்காய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.