நகராட்சி துணை தலைவரை கொல்ல சதி: கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி முன்னாள் தலைவர் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான துணை தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட கவுன்சிலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை நகராட்சி தலைவராக இருந்த முருகன் கடந்த 2007 ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி அன்று காரில் சென்றபோது ரிமோட் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் திமுக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, நகராட்சி கவுன்சிலர் மந்தக்காளை, எலக்ட்ரானிக் இன்ஜீனியர் பாலா, சரவணன், கண்ணன், வீரமணி, மனோகரன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பாலா குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் ஜாமினில் வெளி வந்தனர். நிபந்தனை ஜாமினில் வெளி வந்த மந்தக்காளை கோவையில் தங்கி காவல் நிலையத்தில் ஆஜராகி மந்தகாளை கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை பெற நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சம்மன் அனுப்ப்பட்டது. பாலா, கண்ணன், மகேந்திரன் தவிர மற்றவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகததால் குற்றப்பத்திரிகை வழங்கப்படாமல் அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முருகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியமான நகராட்சி துணை தலைவர் செல்வரங்கனை கொலை செய்யும் திட்டத்துடன் கூலிப்படையினர் சிவகங்கை வந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிவகங்கை-மேலூர் சாலையில் வாகன சோதனை நடந்தது.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அந்த சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்த மந்தக்காளையின் காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். காரை சோதனையிட்டபோது சீட்டுக்கு அடியில் இரண்டு பட்டாக்கத்திகள் இருந்தன.
காரில் மந்தகாளை, டிரைவர் சீனுவாசன் மற்றும் 4 பேர் இருந்தனர். ஆறு பேரையும் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மந்தகாளையுடன் வந்த 4 பேரும் கூலிப்படையினர் என்றும் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (32), முருகன் (29), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆன்ட்ரூஸ் (31), கும்பகோணத்தைச் சேர்ந்த மாரியப்பன் (28) என்பது தெரியவந்தது.
மேலும், மந்தகாளை திருச்சி சிறையில் இருந்தபோது நான்கு பேருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை நகராட்சி தலைவர் செல்வரங்கனை கொலை செய்வதற்காக சிவகங்கைக்கு இவர்கள் நான்கு பேரையும் கூலிப்படையாக அழைத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி சிறைக்கு அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications