தாய் கண் முன் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை சாவு
நெல்லை: தாய் கண் முன்னே வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
பாளை அருகே உள்ள விஎம் சத்திரம் லட்சுமி நகர் மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பாஸ்கர்-வனிதா தம்பதி. இவர்களது மகள் கமலி (3), மகன் கோபிநாத் என்ற ஒன்றரை வயது குழந்தை.
கமலி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி வேனில் சென்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கமலியை அழைத்து செல்வதற்காக பள்ளி வேன் வீட்டு முன் வந்து நின்றது.
வனிதா மகளை அழைத்துக் கொண்டு வந்து வேனில் ஏற்றி விட்டார். அப்போது கைக்குழந்தை கோபிநாத் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றுவிட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் வேன் அங்கிருந்து புறப்பட்டது.
அப்போது வண்டிக்கு அடியில் உட்கார்ந்து இருந்த குழந்தை கோபிநாத் மீது வேன் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த வனிதா, கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.