சட்டசபை-லோக்சபா தேர்தல்: கலாம் கருத்துக்கு பாஜக வரவேற்பு
சென்னை: லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆட்சி நடத்துவதற்கு நிதி தேவை. நிதிக்காக வரிகள் போட வேண்டியதும் கட்டாயமாகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு, அடுத்த ஆண்டு சட்டமன்றத்துக்கு, அதற்கும் அடுத்த ஆண்டு சில சட்டமன்றத்திற்கும் இடைத் தேர்தல், அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் என ஆண்டுதோறும் தேர்தல் வருவதால் நிச்சயமான ஒரு 5 ஆண்டு காலத்துக்கான திட்டம் தீட்டி எந்த அரசும் செயல்புரிய முடியவில்லை.
அடிக்கடி வாக்களிக்கும் நிலை வரும்போது வாக்காளர்களும் வெறுப்பு அடைகிறார்கள். ஒரு அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுமானால் செலவு மிச்சமாகும். உழைப்பும் குறையும். தேர்தல் ஆணையத்துக்கும் செலவு குறையும்.
எனவே நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்களையும் சேர்த்து நடத்துவது என்கின்ற டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. இதே கருத்தினை அத்வானியும் நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கிறார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் எந்தெந்த சட்டசபைகளெல்லாம் இரண்டரை ஆண்டு காலத்தை முடித்துள்ளனவோ அவைகளை கலைத்துவிட்டு ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கலாம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எஞ்சிய சட்டசபைகளின் தேர்தலை சேர்த்து நடத்துகின்ற வகையில் அந்த மாநிலங்களின் ஆட்சியை விசேஷ சட்டத்தின் மூலம் நீட்டிக்கலாம். அல்லது ஜனாதிபதி ஆட்சியில் நீட்டிக்கலாம்.
பரிசீலனைக்குரிய அப்துல் கலாம் கருத்தினை அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.