ஒரிசாவில் மீண்டும் வன்முறை - ஒருவர் கொலை - வீடுகள் எரிப்பு
புவனேஸ்வர்: ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கந்தமால் மாவட்டத்தில் பல கிறிஸ்தவர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வி.எச்.பி. தலைவர் சுவாமி லட்சுமாணந்த சரஸ்வதி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
கிறிஸ்தவர்களின் வீடுகளும், சர்ச்சுகளும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கலவரத்தை அடக்க மத்திய போலீஸ் படை குவிக்கபட்டு உள்ளது. இருந்தும் அங்கு நிலைமை சீராகவில்லை. தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் ராய்கியா என்ற இடத்தில் போலீஸ் நிலையம் மீது வன்முறை கும்பல் தாக்கியது. அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.போலீஸ் தரப்பில் 25 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆலயத்துக்குள் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. நிலைமை மோசமாகாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று வன்முறை தீவிரமடைந்தது. அதே ராய்க்கியா பகுதியில், பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் படுகாயமடைந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர். தீவைக்கப்பட்ட வீடுகள் உள்ள பகுதி சிசபாங்கா கிராமம் ஆகும். காயமடைந்தவர்கள் ராய்க்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல இப்பகுதியில் மத போதகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது.
ராய்க்கியா, கோச்சாபூர், திக்கபாலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
கந்தமால் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று இரவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிக அளவிலான சிஆர்பிஎப் போலீஸாரை அனுப்பி வைக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்தார்.
ஏற்கனவே கந்தமால் மாவட்டத்தில் 43 கம்பெனி மத்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications