பாஜக - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளது: இல.கணேசன்
சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சேலத்தில் பாஜகவின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் இன்றும் நாளையும் நடக்கின்றன. இதில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மேலிட பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மாநில தலைவர் இல.கணேசன் நேற்று சேலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்களில் சமுதாய பிரச்சனைகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நடக்க உள்ள மையக்குழு முடிவு செய்யும். இந்த கூட்டத்துக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை.
நளினியை விடுதலை செய்வதில் ஆதரவு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பிரியங்கா-நளினி சந்திப்புக்கு பிறகே நளினியின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விடுதலை புலிகளை ஆதரிக்கும் சில கட்சிகள் நளினி விடுதலை பெறுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
பிரியங்காவும் ராகுலும் கூறுவது மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. விவசாய கடன் தள்ளுபடி கூட ராகுல் கூறினார் என்பதற்காக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதை செயல்படுத்தினார். ஆனால் இதை பாஜக ஏற்கனவே வலியுறுத்தி வந்தது.
ஒரிஸா, கர்நாடகா, உத்திர பிரதேச மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இந்துக்களை மதம் மாற்ற முயற்சி செய்யப்பட்டதால் நடந்துள்ளன என்றார்.