குழந்தைகளைக் குறி வைக்கும் கொலைகார கொசு கியூலெக்ஸ்!
க்யூலெக்ஸ் என்பது ஒரு வகை கொசுவின் பெயர். பெயர்தான் நன்றாக இருக்கிறதே தவிர இந்த கொசு பரப்பும் வைரஸ், உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு கொடூரமானது. இந்த கொசுவின் மூலம் பரவும் வைரஸால், ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் செயலிழந்து போய் உயிரே போய் விடும்.
கியூலெக்ஸ் கொசு, வெஸ்ட் நைல் வைரஸ், பிலாரியஸிஸ், ஜப்பானிஸ் என்செபலிடிஸ், செயின்ட் லூயிஸ் என்செபலிடிஸ், ஏவியான் மலேரியா ஆகிய வைரஸ்களை பரப்புகிறது.
நன்கு வளர்ந்த கியூலெக்ஸ் கொசுவின் சைஸ், 4 முதல் 10மில்லி மீட்டராகும். தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் அதிகம் காணப்படும். ஒரே நாளில் வளர்ந்து விடும் இந்தக் கொசு படு வேகமாக வைரஸ்களைப் பரப்புவதில் கில்லாடியாம்.
கியூலெக்ஸ் கொசுக்களில் பல வகைகள் உள்ளன. பனாமாவில் மட்டும் 88 வகை கியூலெக்ஸ் கொசுக்ள் உள்ளனவாம்.
இந்தக் கொசுவால் பரப்பப்படும் வைரஸால், மூளை பாதிக்கும். 15 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே தாக்கும் தன்மை இந்த கொசுவுக்கு உண்டு.
கொசு கடித்தவுடன் அதன் மூலம் பரவும் வைரஸ் மூளையைத் தாக்குகிறதாம். முதலில் காய்ச்சலாக ஆரம்பிக்கும் இந்த நோய், சரியான உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால் நரம்பு மண்டலத்தையே பாதிக்க வைக்கும் அபாயமுள்ளது என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
தற்போது, கியூலெக்ஸ் கொசுக்கள் மூலம் கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தமிழக அரசின் சுகாதாரத் துறையே அறிவித்துள்ளது.
இதைத் தடுப்பதற்காக மாவட்டம்தோறும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் கட்டமாக பெரம்பலூரில் மட்டும் 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே கதி கலங்கிப் போன தமிழக மக்களை, கியூலெக்ஸ் பிடியிலிருந்து காப்பாற்ற தமிழக சுகாதாரத் துறை விரைந்து செயல்படுவது ஆறுதல் தருகிறது.