'நளினி விடுதலை'-சட்டத்தில் இடமில்லை: சுவாமி
சென்னை: நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே, நளினி விடுதலையாக வாய்ப்பில்லை என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நளினி விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த தவறான செய்திகள் வெளி வந்துள்ளன. நளினியை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. விடுதலை பற்றி முடிவு செய்யும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நளினி விடுதலை தொடர்பாக சிறை ஆலோசனை குழு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இந்த குழுவின் உத்தரவை நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்ய வைத்து அதையே ஒரு காரணமாக காட்டி அவரை விடுதலை செய்யும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடி உள்ளன.
இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு முதலில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பின்னர், தமிழக அரசின் நிலைப்பாடுதான் தங்களது நிலைப்பாடு என்று கூறியது. பின்னர் மீண்டும் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு எதையோ மறைக்க பார்க்கிறது.
இந்த பிரச்சனையில் நளினி மீண்டும் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அவரது தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து வாதாடுவேன். நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே, நளினி விடுதலையாக வாய்ப்பில்லை.
கோத்ரா சம்பவம் குறித்து நானாவதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையானது. கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குஜராத் அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. இதைபோல் திரிகோணமலையில் கோயில் பூசாரி கொல்லப்பட்டதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
எனது கட்சியின் ஏர் உழவன் சின்னம் பறிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த சின்னத்தை வேறு எந்த கட்சிக்கும் அளிக்க முடியாது என்றார்.