ரைஸ் இந்தியா வருகிறார்-ஒப்பந்தம் கையெழுத்து?
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் அக்டோபர் 3ம் தேதி, ஒரு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் அவரும், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பது மட்டுமே பாக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தின்போதே ஒப்புதல் கிடைத்து விடும். இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் அதில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அது நடக்கவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி கான்டலீசா ரைஸ் இந்தியா வரவுள்ளார். ஒரு நாள் பயணமாக அவர் வருகிறார். இந்த பயணம் கடந்த ஒரு வருடமாகவே இழுபறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி ரைஸ் வருகிறார். அப்போது பிரணாப் முகர்ஜியுடன் அவர் இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்.
இந்த பயணத்திற்கு முன்பாகவே அமெரிக்க நாடாளுமன்றம் அணு சக்தி ஒப்பந்த்திற்கு அனுமதி அளித்து விட்டால், அது தொடர்பான 123 ஒப்பந்தத்தில், பிரணாப் முகர்ஜியும், ரைஸும் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நாளை ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. அதேபோல திங்கள்கிழமையன்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் பயணமாக நாளை அமெரிக்கா புறப்படுகிறார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அமெரிக்க தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.