கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் - பதட்டம்
நெல்லை: கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முடவன்குளம் கிராமத்தில் உள்ள உச்சினிமா காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு உரிமை உள்ளது. இவர்களுக்குள் கொடைவிழா நடத்துவதில் முன் விரோதம் இருந்து வந்ததால் தனித்தனியாக கொடை விழா நடத்துவர்.
கடந்த 22ம் தேதி ஒரு பிரிவினர் கொடை விழா நடத்தினர். மற்றொரு பிரிவினர் அக்டோபர் 13ல் நடத்த உள்ளனர். நேற்று முன்தினம் ஊரில் உள்ள சுடலையாண்டவர் கோயில் நள்ளிரவு பூஜை நடந்தது. இதில் வழிபட வந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் பாரதி, சந்திரன், ஆறுமுகம், சங்கர், சுப்பையா, சிங்கரவேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இரு பிரிவினரும் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். இதில் பாரதிராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோயில் தர்மகர்த்தா மைக்கெல், சிங்காரவேலு உள்பட 10 பேர் மீதும், சிங்காரவேலு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், பாரதிராஜா உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இரு தரப்பையும் சேர்ந்த சுரேஷ், பாக்கியம், முத்துபெருமாள், இசக்கி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications