இந்திய பாணி தடுப்பரண்கள்-திணறடிக்கும் புலிகள்!
கொழும்பு: இந்திய ராணுவம் முன்பு பயன்படுத்திய தடுப்பரண்களைப் போல விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களால், தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளதாம் இலங்கை ராணுவம்.
விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வந்தாலும், அவர்களின் ராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு நாட்டின் ராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும், சாதுரியமும், புத்திசாலித்தனமும், ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது.
இந்த நிலையில் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய ராணுவமும் கையாளுகிறது என்பதுதான்.
பாகிஸ்தானுடனான போரின்போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சு பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நச்சிகுடா முதல், கிழக்கில் உள்ள அக்கரையன்குளம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது இந்த தடுப்பரண். ஸிக் ஸாக் வடிவில் இந்த தடுப்பரண் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாக இந்த தடுப்பரண் உள்ளது. முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும். இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக் கூடிய பங்கர்கள். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் புலிகளின் தடுப்பரணாகும்.
இந்த பதுங்கு குழிகள் எனப்படும் பங்கர்களுக்குள் இருந்தபடி 360 டிகிரி கோணத்தில் எந்தப் பக்கம் உள்ள எதிரிகளையும் குறி பார்த்து தாக்க முடியுமாம்.
கண்ணிவெடிகளை இயக்குவதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்த பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் ராணுவத்தால் தப்ப முடியாதாம்.
ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பங்கர்களிலிருந்து வரும் தாக்குதலை சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்து விட்டால், டிரெஞ்ச் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம்.
இந்த டிரெஞ்ச் 10 அடி ஆழமுடையது. இந்த பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது. இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம்.
இத்தகைய பாதுகாப்பு அரண்களை இதுவரை இலங்கை வீரர்கள் சந்தித்ததில்லையாம். இதில் அவர்களுக்கு அனுபவமும் கிடையாதாம். இதுகுறித்தும் தெரியாதாம்.
ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி மற்றும் மீட்பு நடவடிகைகளுக்காக கொண்டு வந்த இயந்திரங்களைக் கொண்டு இந்த பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே நில மார்க்கமாக விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளுக்குள் ராணுவத்தால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விடுதலைப் புலிகளிடம் மிகவும் அதி நவீனமான ஆயுதங்கள் ஏராளமாக இருக்கிறதாம். ஆனால் போதிய ஆட்கள் இல்லாததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை இலங்கை ராணுவ தலைமைத் தளபதி பொன்சேகாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.