இலங்கை கடற்படை வெறிக்கு பலியான மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு
சென்னை: இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் முருகனின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீட்டை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் சோகமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பலியான மீனவர் முருகனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் முருகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.
அதற்கிணங்க ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி அந்த குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ. ரூ. 50,000 உதவி:
இந்த நிலையில் அதிமுக சார்பில் முருகன் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்து மீறல்களை நான் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.