வடிவேலு அலுவலகம் மீது தாக்குதல்: 13 தேமுதிகவினர் சரண்!
சென்னை: நடிகர் வடிவேலுவின் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த 13 பேரும் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலுவின் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலு தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அலுவலகமும் தாக்கப்பட்டது.
இதுகுறித்து வடிவேலுவின் உதவியாளர் மாரிமுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் புகார் பதிவு செய்து சென்னை சைதாப்பேட்டை 9வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 13 தேமுதிகவினரும் கோர்ட்டுக்கு வரவில்லை. வடிவேலு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து 13 தேமுதிகவினருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இனி சம்மன் வந்தால் மட்டும் ஆஜரானால் போதும் என வடிவேலுவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ்குமார் உள்ளிட்ட 13 தேமுதிகவினரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி 13 பேரின் பிடிவாரண்ட்டையும் ரத்து செய்தார். விசாரணை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications