ஓரினச் சேர்க்கை: பாட்டீல் மீது பிரதமரிடம் அன்புமணி புகார்!
டெல்லி: ஓரினச் சேர்க்கை விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் முற்போக்காகச் சிந்திக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக்குவதில் தேவையில்லாமல் அவர் போடும் முட்டுக்கட்டைகளைப் பற்றி பிரதமரிடம் புகார் செய்யப் போகிறேன் என மத்திய சுகாதாரக் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இதுகுறித்த பொதுநல வழக்கில், ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகமும், சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளன.
இதற்கு உரிய தீர்வு காண, மத்திய அரசு தன் கருத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சுகாதாரத் துறையின் கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று, மத்திய அரசுக்காக ஆஜரான வக்கீல் கூறிவிட்டார்.
இதனால் கடுப்பான மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில், உள்துறை அமைச்சகத்துக்கு உலகம் புரியவில்லை. முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் அமைச்சர் சிவராஜ் பாட்டீல். இந்த பிரச்சினையில் உள்துறை அமைச்சகம் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது எனது சொந்த கருத்து அல்ல. சுகாதாரத் துறையின் கருத்து. விவரம் புரியாமல் இதனை எதிர்க்கிறார்கள். இன்று இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்திய குற்றவியல் சட்டம் 377ன் விதிகளைக் கடுமையாக்க வேண்டும் என்கிறது உள்துறை அமைச்சகம். அப்படிச் செய்வதால் என்னவாகும் தெரியுமா...? ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமான உறவாகிவிடும்.
ஆனால் இன்னும் பெருகத்தான் செய்யும். ஆனால் இதனை சட்டப்பூர்வமாக்கினால், குற்றங்களைத் தடுக்கலாம், இந்தியாவை அச்சுறுத்தும் எய்ட்ஸைக் குறைக்கவும் முடியும்.
இன்னொன்று இந்தச் சட்டம் மட்டும் கடுமையாக்கப்பட்டால், ஓரினச் சேரக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். அப்புறம் எப்படி எய்ட்ஸ் குறையும்?.
இந்த உண்மை உள்துறை அமைச்சருக்குப் புரியாதது வேதனை அளிக்கிறது. இன்னொன்று ஓரினச் சேர்க்கை என்பது உடல்-மனம் ரீதியான சமாச்சாரம். அதை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்துவதெல்லாம் முடியாது. உலகம் எங்கோ போய்விட்டது. புரிந்து கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் குறித்து நிச்சயம் பிரதமரிடம் புகார் செய்வேன். தயவுசெய்து இதைத் திரித்து எழுதாதீர்கள் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications