கொலை முயற்சி?-காதலன் மீது கர்ப்பிணி புகார்
சென்னை: கருவை கலைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலர், அவரது நண்பர் மூலம் தன்னை கொலை செய்ய முயன்றதாக பார்களில் நடனமாடும் பெண் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மீனுஜா (22). ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாடி நடனமாடும் பெண். இவருக்கும், ஜோ என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஜோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் சந்தோஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலானது. இருவரும் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தினர்.
மீனுஜா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷிடம் கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ் மறுத்துள்ளார். கருவை கலைத்துவிடுமாறு மீனுஜாவிடம் சந்தோஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மீனுஜா மறுத்துவிட்டார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசில் மீனுஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந் நிலையில் கடந்த 25ம் தேதி இரவு 8 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டியில் மீனுஜா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு ஆட்டோ ஸ்கூட்டி மீது மோதியதோடு, ஆட்டோவில் இருந்தவர் மீனுஜாவை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் மீனுஜா கீழே விழுந்து காயம் அடைந்தார்.
எழும்பூரில் உள்ள தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் மீனுஜா சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் விசாரித்தபோது, தனது காதலரின் தூண்டுதலால் அவருடைய நண்பர் ஆட்டோவில் வந்து தன்னை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு மருத்துவமனை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மீனுஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications