மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி
இன்று தேசப்பிதா மகாத்மாவின் 140வது பிறந்த நாளாகும். அதேபோல லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்கள், இரு மறைந்த தலைவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, ராஜ்யசபா எதிர்க்கடட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வயலார் ரவி, முரளி தியோரா, எம்.எஸ்.கில், பிருத்விராஜ் செளகான், நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி மற்றும் சாஸ்திரியன் வாழ்க்கை வரலாறு குறித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்கப்பட்ட நூல்களை லோக்சபா செயலகம் இந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்டது.
தமிழகத்தில் ...
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பஜன் பாடல்களும், பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டன. அதை ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்.
மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
காந்தி சிலையிலிருந்து சைக்கிள் பேரணியை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார்.
இந்திய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.