கோயில் நில விசாரணை அறிக்கை: வெளியிட ராம.கோபாலன் வலியுறுத்தல்
சென்னை: கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டுமென்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து முக்கிய கோயில்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் மைய கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருப்பதை இந்து முன்னணி பாராட்டுகிறது.
ஆனால், அவ்வாறு பொருத்தப்படும் கேமிராக்களில் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படுகின்றனவா? மாதம் ஒரு முறையாவது கேமிரா சரி பார்க்கப்படுகின்றனவா? என்பதையும் கண்காணித்து வர வேண்டும்.
கோயில் நிலங்களை புதிதாக விற்கவோ, குத்தகைக்கு விடவோ தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதில் புதிதாக விற்கவோ என்று சொல்லியிருப்பதன் உட்பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ள பக்தர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
வடபழனி வேங்கீஸ்வரர் கோயில் குளம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குளத்தை மீட்டு அதில் தெப்பத் திருவிழா நடத்த அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கோயில் நிலங்களை யார் யார் அனுபவித்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
கோயில்களில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் பிரச்சனையில் அரசுசாரா ஆன்மீக அமைப்புகள் எடுக்கும் முடிவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.