மீனவர்களை சுடும் கடற்படை: பொகல்லகாமாவிடம் பிரணாப் கண்டிப்பு
நியூயார்க்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை உருவாக்க இந்தியாவும், இலங்கையும் முடிவு செய்துள்ளன.
நியூயார்க் வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமா சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குவது குறித்தும் அப்போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டாக வழிமுறைகளை உருவாக்க அப்போது தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திய மீனவர்களை குறி வைத்து தாக்குவதை இலங்கை கடற்படை கைவிட வேண்டும் என பொகல்லகாமாவிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
இலங்கை மாகாணத் தேர்தல் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
நியூயார்க் பயணத்தின் ஒரு கட்டமாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனையும், பிரணாப் முகர்ஜி சந்தித்தார். ஐநாவின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதற்காக பிரணாப் முகர்ஜியிடம், பான் கி மூன் பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications