காக்கிவாடன்பட்டி கோவில் - தொடர் உண்ணாவிரதம் வாபஸ்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன் பட்டியில், கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து மேற்கொண்ட உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது காக்கிவாடன்பட்டி. இங்கு காளியம்மன் மற்றும் கண்ணன் கோவில்கள் உள்ளன.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும், ஒரு சமூகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கோயிலின் உரிமை குறித்த பிரச்சனையால் கோயில் பூட்டப்பட்டது.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்த உரிமை கோரி 6 சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு அருகே உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி முதல் குடியேறி அங்கேயே தங்கி உள்ளனர்.
இரு தரப்பு மக்களிடம் சமாதான பேச்சுவார்தையை அரசு அதிகாரிகள் நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் இரு தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும் என்று மக்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பு மக்களிடமும் சிவகாசி ஆர்.டி.ஓ. கணேசன் பேச்சுவார்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தங்களது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டு தங்களது வீடுகளுக்குத்திரும்பினர்.