காற்றின் வேகம் குறைந்தது: காற்றாலை மின் உற்பத்தி கடும் பாதிப்பு
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தென்காசி பகுதியில் காற்றாலைகளில் மின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆரியங்காவு கணவாய் பகுதியில் காற்று அதிகம் வீசும் பகுதியாகும். இதனால் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தென்காசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு வரை இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் 3 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் குறைவான காற்றழுத்தம் காரணமாக காற்றாடிகள் இயக்க முடிவது இல்லை. இதனால் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள காற்றாலை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.