கர்நாடகத்திற்கு வாருங்கள் - டாடாவுக்கு எடியூரப்பா மீண்டும் அழைப்பு
பெங்களூர்: நானோ கார் தொழிற்சாலையை கர்நாடக மாநிலத்தில் அமைக்க முன்வர வேண்டும் என ரத்தன் டாடாவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
டாடா நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை கர்நாடகத்தில் அமைக்க முன் வர வேண்டும் என ஏற்கனவே எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார். வட கர்நாடகத்தில் இதற்காக 1000 ஏக்கர் நிலத்தையும், தேவையான வசதிகளையும் டாடா மோட்டார்ஸுக்கு அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா நேற்று முறைப்படி அறிவித்து விட்டார். இந்தப் பின்னணியில் தனது கோரிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளார் எடியூரப்பா.
இதற்கிடையே, முதல்வரின் செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நானோ ஆலையை கர்நாடகத்தில் அமைப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச மாநில அரசு இரண்டு மூத்த அதிகாரிகளை நியமித்தது.
இந்தக் குழுவினர், டாடா நிறுவனத்தின் ரவிகாந்த் தலைமையிலான குழுவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். டாடா குழு மீண்டும் திங்கள்கிழமை பெங்களூர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
ரத்தன் டாடாவையும் பெங்களூருக்கு வருமாறும், பேச்சுவார்த்தை நடத்தலாம் என முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் அதி வேகமான நடவடிக்கை காரணமாக டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலை கர்நாடகத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.