மாலை அணிந்த மாணவர்களுக்கு கிறிஸ்தவப் பள்ளியில் தடை- பரபரப்பு
நெல்லை: விரதம் இருந்து, மாலை அணிந்த மாணவர்களை பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் வெளியேற்றினார். பெற்றோர்களும், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கி என்ற மாணவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்கு செல்வதற்காக மாலையணிந்து விரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இசக்கி மாலை அணிந்து பள்ளிக்கு வருவதை பார்த்த வாட்ச்மேன் ஸ்டீபன் வேதமாலை, இசக்கியை தடுத்து நிறுத்தி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று விட்டு வகுப்புச் செல்லுமாறு கூறினார்.
இதேபோல் மாலை அணிந்த மற்ற மாணவர்களையும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. பிளஸ் 1 மாணவர் செல்வகுமார், 7ம் வகுப்பு சூர்யா உள்பட 15க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் மாணவர்களின் விளக்கம் கேட்டார்.
பின்னர், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர். வீடு திரும்பிய இசக்கி பெற்றோரிடம் சம்பவம் குறித்து கூறி அழுதார்.
இதுகுறித்து தகவலறிந்த இந்து முண்ணனி மாவட்ட தலைவர் காந்திமதிநாதன், செயலாளர் உடையார், துணை தலைவர் வெட்டும்பெருமாள், பாஜக நிர்வாகி குற்றாலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், இசக்கியின் தந்தை முத்துராமலிங்கம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்து அமைப்புகள் சார்பில் பெற்றோர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் காந்திமதிநாதன் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications