மோடிக்கு விசா வழங்காதது ஏன்? - ரைஸ் மழுப்பல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து அமெரிக்கா விசா மறுப்பது ஏன்? என்ற எதிர்கட்சித் தலைவர் அத்வானியின் கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கான்டலீசா ரைஸ் பதில் சொல்லாமல் மழுப்பி விட்டார்.
நேற்று முன்தினம் டெல்லியில் எதிர்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்தார் ரைஸ். அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பயங்கரவாதம் குறித்து தன்னுடம் பேசிக் கொண்டிருந்த ரைஸை இடைமறித்த அத்வானி, நரேந்திர மோடி எங்கள் நாட்டின் முக்கியத் தலைவர். குஜராத் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆனால் அவருக்கு 2005லிருந்து அமெரிக்கா விசா மறுத்து வருகிறதே...? என கேள்வி எழுப்பினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரைஸ், இந்த விஷயம் குறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் பேசப் போவதாகக் கூறி அத்தோடு அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து, பிற விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.
மோடியின் ஆட்சியில் 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்கள் மற்றும் அப்போது போலீசாரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. இந்தத் தடை இன்றுவரை நீக்கப்படவில்லை. இந்த ஆண்டும் கூட மோடியின் விசா விண்ணப்பத்தை மறுத்துவிட்டது அமெரிக்கா.