மதுரை கலெக்டர் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்
மதுரை: கோயில் நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கே அந்த நிலத்தை வழங்க கோரி மதுரையில் கலெக்டர் காரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட தலைவர் போஸ், செயலாளர் தேவதாஸ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவர்களுக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து தர வேண்டும், மேலும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்கள் குறித்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஐந்து பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று கூறினர். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்டு திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகளும் போலீஸாரும் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து அவரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.