ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெ.வுக்கு புத்தி வந்துள்ளது: ஸ்டாலின்
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் புத்தி வந்துள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினையில் உணர்வு வந்தது போல நாடமாடுகிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசியாதவது:
நாளை நான்தான் முதல்வர் என்று கூறி கனவு கண்டுகொண்டிருக்கும் தலைவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். இலங்கை பிரச்சனையில் திமுக அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் முதல்வருக்கு இந்த பிரச்சனை குறித்து அக்கறை இல்லை என்றும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்தது திமுகதான்.
கடந்த 1957ம் ஆண்டுதான் தேர்தல் களத்தில் போட்டியிட முடிவ செய்து நின்ரோம். 1956ம் ஆண்டு திமுக பொதுக்குழு கூடியபோது இலங்கை தமிழர் உணர்வை பிரதிபலிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக சார்பில் எத்தனையோ மாநாடு நடத்தியுள்ளோம். ஆட்சியில் இருந்தபோதும் சரி இல்லாதபோதும் சரி சட்டசபையில் குரல் கொடுத்துள்ளோம்.
ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சனையில் உணர்வு வந்ததுபோல் நாடகம் நடத்தியுள்ளார். இலங்கை பிரதமரை இந்தியாவுக்கு அழைத்து, இந்திய பிரதமர் பேச வேண்டும் என்கிறார். இந்த புத்தி இப்போது வந்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் குரல் கொடுத்தபோது பொடா சட்டத்தில் கைது செய்தார். தமிழர்கள் இளிச்சவாயர்கள் என ஒரு நாடகத்தை ஏற்படுத்தியுள்ளார். இது நிறைவேறாது.
ஐந்தாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்து 19.6.2006 அன்று கூட்டணி தலைவர்களை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து இதுபோல தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதில் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பினோம்.
இதை மறந்துவிட்டு திமுக தூங்கிக் கொண்டிருப்பதாக தவறான பிரசாரம் செய்கின்றனர். இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். முதல்வர் கருணாநிதி காலத்தில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு முடிவு வரப்போகிறது. அதற்கு துணை நிற்போம் என்றார்.
கருணாநிதியால்தான் முடியும்..
கூட்டத்தில் எம்பி கனிமொழி பேசியதாவது:
இன்று இரண்டு லட்சம் குடும்பங்கள் இலங்கையில் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தினமும் 6,000 குண்டுகள் வீசப்படுகின்றன. அவர்களுக்கு மழை வந்தால் தங்க இடம் கிடையாது. மருத்துவ வசதி இல்லாததால், காலரா, மலேரியா வந்து இறக்கின்றனர்.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கு இயங்கி வந்த மனித உரிமை அமைப்பையே இலங்கை அரசு வெளியேற்றியுள்ளது.
தமிழினத்தை இலங்கையில் இருந்து அழித்துவிட கங்கணம் கட்டி அங்கு அரசு இயங்கி வருகிறது. இலங்கை அரசை தட்டிக்கேட்க திமுகாவல்தான் முடியும். முதல்வர் கருணாநிதியால்தான் முடியும். தமிழர்களை ஒன்று திரட்டும் தலைவர் முதல்வர் கருணாநிதிதான். அவர் குரலுக்குத்தான் பிரதமர் பதிலளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications